அரசு ஊழியர்களை அழைத்து பேச்சு நடத்தலாமே: சொல்வது வீரமணி

வெள்ளி, 19 பிப்ரவரி 2016 (06:21 IST)
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்து முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கி.வீரமணி யோசனை தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஜனநாயக மாண்புக்கு உகந்தது அல்ல.
 
தமிழக சட்டப் பேரவை நடந்து கொண்டிருக்கும் நிலையில் போராடும் அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் முதல்வர் ஜெயலலிதா பேச்சு நடத்த வேண்டும்.
 
கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு துறைகளை சேர்ந்த சங்கங்களின் நிர்வாகிகள் போராடி வருகின்றனர்.
 
தமிழகம் முழுவதும் புதன்கிழமை மறியல் போராட்டம் நடந்தது. இதில் 4 லட்சம் அரசு ஊழியர்கள், 2 லட்சம் ஆசிரியர்கள் என 6 லட்சம் பேர் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
இதே போன்று, நீதித் துறையில் பணிபுரியும் அலுவலக உதவியாளர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட சுமார் 12 ஆயிரம் பேர் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
 
அரசுப் பணியாளர்கள் ஆட்சி இயந்திரத்தை இயக்கும் எஞ்ஜின் ஆகும். அந்த முக்கிய எந்திரம் பழுதுபட்டால் உடனே  கவனித்தால்தானே ஆட்சி வாகனம் சரியாக ஓடும்? எனவே, தமிழ்நாடு அரசு பணியாளர்களை அழைத்து முதல்வர் ஜெயலலிதா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என யோசனை தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்