மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மக்கள் சந்திப்பு இயக்கம்: ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

செவ்வாய், 26 ஆகஸ்ட் 2014 (14:11 IST)
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இடதுசாரி கட்சிகள் நடத்தும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
 
மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், தமிழக அரசின் மக்களைப் பாதிக்கும் செயல்பாடுகளை கண்டித்தும் தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 25 முதல் 31 ஆம் தேதி வரை மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக அறிவித்திருந்தன.
 
அதன்படி, மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தை சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் திங்கள்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்து, வீடு வீடாக துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். இதில் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்