சரக்கு கம்மியா ஊத்தி கொடுத்த நண்பன் கொடூர கொலை!

வெள்ளி, 28 அக்டோபர் 2016 (10:36 IST)
சென்னை கொத்தவால் சாவடியை சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ண மூர்த்தி(37) என்பவர் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டு பிணமாக மீட்கப்பட்டார். சுமை தூக்கும் வேலை செய்யும் இவரை கொலை செய்ததாக இவரது நண்பரை கைது செய்துள்ளனர்.


 
 
கிருஷ்ண மூர்த்தி பிணமாக கண்டெடுக்கப்பட்டதும், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கிருஷ்ண மூர்த்தியின் நட்பு வட்டாரத்தில் விசாரணை நடத்தி வந்தனர். இதில் அவரது நண்பர் ராபர்ட்டிடம் நடத்திய விசாரணையில் போலீசாருக்கு சந்தேகம் வந்தது. பின்னர் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் தான் கிருஷ்ண மூர்த்தியை கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
 
கொலை செய்த ராபர்ட் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், நானும் கிருஷ்ண மூர்த்தியும் நண்பர்கள். இருவரும் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவோம். எப்பொழுதும் கிருஷ்ண மூர்த்தி எனக்கு குறைவான அளவு மதுவே குடிக்க கொடுப்பார். இதனால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வரும்.
 
அதேப்போல தான் சம்பவம் நடந்த அன்றும் எனக்கு மது குறைவாக கொடுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த நான் அருகில் இருந்த கல்லை எடுத்து கிருஷ்ண மூர்த்தியின் தலையில் போட்டு கொன்றேன் என கூறியுள்ளான். இதனையடுத்து ராபர்ட்டை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்