போலி வாக்காளர்களை நீக்கியே ஆகவேண்டும்: கருணாநிதி கோரிக்கை
புதன், 10 பிப்ரவரி 2016 (05:14 IST)
தமிழகத்தில் போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும் என கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து, திமுக தலவைர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை எந்த அளவுக்குச் சேர்த்திருக்கிறார்கள் என்பது பற்றிக் கடந்த சில மாதங்களாக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதாரப் பூர்வமாகப் புள்ளி விபரங்களோடு எடுத்துச் சொல்லி வருகிறார்கள்.
திமுக சார்பிலும் இது பற்றிய பல புகார் மனுக்கள் தேர்தல் ஆணையரிடம் தரப்பட்டுள்ளன. கடந்த 24-1-2016 அன்று நான் விடுத்த விளக்கமான அறிக்கையிலும், எந்த அளவுக்குத் தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களைப் பெருவாரியாகச் சேர்த்து மிகப் பெரிய மோசடி நடைபெற்றுள்ளது என்பதை எடுத்துக் காட்டி, இந்தியத் தேர்தல் ஆணையம் சட்ட ரீதியான அவசர நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டோன்.
தகுதியில்லாத வாக்காளர்களைப் பெருமளவில் சேர்த்த மோசடிகள் பற்றி “டைம்ஸ் ஆப் இந்தியா”“, “இந்தியன் எக்ஸ்பிரஸ்”“ போன்ற நாளேடுகளில் வந்த செய்திகளையும் எடுத்துக்காட்டியிருந்தேன்.
மாநிலங்களவை கழகக் குழுத் தலைவர் கனிமொழியும் டெல்லியில் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையரைச் சந்தித்து விவரங்களையெல்லாம் எடுத்துக் கூறியிருக்கிறார்.
இதனை யொட்டி தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஒரு சில இடங்களில் நேரில் சோதனையிட்டு, வாக்காளர் பட்டியல் மோசடி பற்றி தி.மு. கழகத்தின் சார்பில் எடுத்துக் கூறப்பட்ட புகார்கள் உண்மையே என்பதைப் புரிந்து கொண்டுள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தை சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் மாவட்டத் தேர்தல் அலுவலர் நடத்தியிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் சென்னையில் மொத்தம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 169 தகுதியில்லாத வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் ஆளுங்கட்சியினரின் அத்துமீறலின் காரணமாக போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.
எனவே, இதே போன்ற போலி வாக்காளர்கள் நீக்கப்பட அனைத்து முயற்சிகளிலும் தேர்தல் ஆணையம் முனைப்புடன் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளார்.