இத்தோடு நிறுத்திக்கோங்க! - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

புதன், 11 மே 2016 (12:30 IST)
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மே 14 ஆம் தேதி மாலை 6 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
 

 
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். வழக்கமாக தேர்தல் பிரச்சாரம் முடிவடையும் கடைசி நாளில் மாலை 5 மணி வரை பிரச்சாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
 
ஆனால், இம்முறை மாலை 6மணி வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே அரசியல்கட்சியினர் வரும் 14 ஆம்தேதி மாலை 6 மணி வரை ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம். மேலும் மே 16ஆம் தேதி வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இடைவிடாது மாலை 6மணி வரை நடைபெறும்.
 
மே 14ஆம் தேதி மாலை 6மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக அல்லது கூட்டம், ஊர்வலம் நடத்தியதாக அல்லது வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் பிரச்சாரம் செய்யும் வகையில் ஏதாவது வெளியிட்டால் அவர்கள் மீது 1951 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126வது பிரிவின்படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
 
எனவே, அரசியல் கட்சிகளும் அனைத்து வேட்பாளர்களும் இந்த விதிமுறைகளை முழுமையாக கடைப்பிடித்து தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ள நேரத்திற்குள் பிரச்சாரத்தையும் மின்னணு ஊடகங்களில் விளம்பரம் செய்வதையும் முடித்துக்கொள்ளுமாறு ராஜேஷ்லக்கானி அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....

வெப்துனியாவைப் படிக்கவும்