இரட்டை இலை சின்னம் முடக்கம்? - கசிந்த தகவல்

புதன், 22 மார்ச் 2017 (12:47 IST)
இரட்டை இலை சின்னத்தை யாருக்கும் அளிக்காமல், தேர்தல் ஆணையம் முடக்கவுள்ளதாக தகவல் வெளியே கசிந்துள்ளது.
 
இரட்டை இலை சின்னம் தங்களுக்கு  சொந்தம் என ஓ.பி.எஸ் மற்றும் தினகரன் தரப்பு தொடர்ந்து கூறிவருகிறது. இது தொடர்பாக ஓ.பி.எஸ் அணி இந்திய தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்தது. இதற்கு தினகரன் தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இரட்டை இலை சின்னம் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க, இரு தரப்பினரையும் இன்று ஆஜரவாக வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தியது.
.
எனவே, இரு தரப்பினருடைய வழக்கறிஞர்களும் இன்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் முன் தங்கள் வாதங்களை எடுத்துரைத்து வருகின்றனர். 
 
இரு தரப்பினருடயை வாதத்திலும் நியாயம் இருப்பது போல் தெரிந்தால், தற்போதைக்கு இரட்டை இலை சின்னம் முடக்கப்படும், அதாவது, இரட்டை இலை சின்னம் யாருக்கும் அளிக்கப்படாமல், அவர்கள் இரு தரப்பினரும் வேறு சின்னத்தை தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் வலியுறுத்தும் என செய்திகள் வெளியானது.


 

 
அதேபோல், தற்போது அந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இரட்டை இலை சின்னம் யாருக்கும் அளிக்கப்படாமல் முடக்கப்படலாம் என முதற்கட்ட தகவல் வெளியானதாக செய்திகள் கசிந்துள்ளது.
 
இருந்தாலும், இறுதி முடிவு என்னவென்பது இன்று மாலைக்குள் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்