திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா உயர் அதிகாரிகளின் நெருக்கடியால் தனது அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது தற்கொலையில் சந்தேகம் இருப்பதாகவும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரியும் அவரது தந்தை ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்பையா முன்னிலையில் இன்று வந்தது.
அப்போது, டிஎஸ்பி தற்கொலை வழக்கில், சிபிஐ விசாரணை தேவையில்லை என்று சிபிசிஐடி தரப்பில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.