ஜெயலலிதாவுக்கு பிராத்தனை செய்த திமுகவினர்!

திங்கள், 3 அக்டோபர் 2016 (11:50 IST)
திருச்சி ஸ்ரீரங்கத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு திமுகவினர் பிராத்தனை செய்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக அதிமுக தொண்டர்கள் தான் அவர்கள் தலைவி ஜெயலலிதாவுக்கு கோவில்களில் சென்று பிராத்தனை செய்வார்கள்.


 
 
ஆனால் தற்போது மருத்துவமனையில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப திமுகவினர் பிராத்தனை செய்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
 
வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணிக்கு கோவிலுக்கு வந்த திமுகவினர் சுமார் இருபது பேர் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் அர்ச்சனை செய்து மனமுருக வேண்டி பிரசாதம் வாங்கி சென்றுள்ளனர்.
 
இது குறித்து கூறிய அவர்கள், தங்கள் குடும்பத்தினர் திமுகவில் இருப்பதால் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி கடன் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. முதல்வரின் தனிப்பிரிவிற்கு மனு அனுப்பி நாங்கள் திமுகவில் இருக்கிறோம் அதனால் எங்களை ஒதுக்கி வைக்கிறார்கள், நீங்கள் தான் நடவடிக்கை எடுத்து எங்கள் குடும்பத்துக்கு விளக்கேற்ற வேண்டும் என மனு அளித்திருந்தோம்.
 
அடுத்த ஒரே மாதத்தில் அரசு எங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்தது, இதனால் எங்கள் குடும்பத்தில் மூன்று பேர் உயர் கல்வி படித்து வருகின்றனர். எங்கள் குடும்பத்தில் ஒளியேற்றிய முதல்வர் நூறாண்டு வாழவேண்டும் என அவர்கள் கூறினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்