நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது; நீதிமன்றத்தில் திமுக வழக்கு - நாளை விசாரணை

திங்கள், 20 பிப்ரவரி 2017 (11:09 IST)
தமிழக சட்டப்பேரவையில் கடந்த 18ம் தேதி நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


 

 
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவது தொடர்பாக, தீர்மானம் கொண்டு வந்த போது, ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதை சபாநாயகர் நிராகரித்தார். அதனால், திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், திமுக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட திமுக எம்.எல்.ஏக்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி சபைலிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் ஆளுநரிடமும் முறையிட்டுள்ளார்.
 
இந்நிலையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மேலும், ரகசிய வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், சட்டப்பேரவைக்குள் போலீசார் அத்து மீறி நுழைந்தது தவறு எனவும் திமுக சமர்பித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. 
 
இந்நிலையில், சபாநாயகர் தனபால்,  துணை சபாநாயகர் மற்றும் பேரவை செயலாளர் ஆகியோர் தலைமை செயலகத்தில் இதுபற்றி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்