மீண்டும் வேலையை காண்பித்த விஜயகாந்த்: தொண்டருக்கு விழுந்தது பளார் பளார்!

செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (11:16 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று பண்ருட்டியில் உங்களுடன் நான் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மாலை 5 மணியளவில் திருமண மண்டபம் ஒன்றில் நடந்த இந்த நிகழ்ச்சியில் தொண்டர் ஒருவரை விஜயகாந்த் பளார் என அடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.


 
 
தேமுதிக சார்பில் உங்களுடன் நான் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. தொண்டர்களை சந்தித்து, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும். பின்னர் விஜயகாந்துடன் சேர்ந்து தொண்டர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வர்.
 
மாலை 5 மணியளவில் நிகழ்ச்சி நடைபெறும் திருமணம் மண்டபத்திற்கு வந்தார் விஜயகாந்த். அங்கு விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள தொண்டர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் விஜயகாந்த் அங்கிருந்த அறை ஒன்றுக்கு சென்றுவிட்டார்.
 
கூட்டம் ஒழுங்குப்படுத்தப்பட்ட பின்னர் புகைப்படம் எடுக்கலாம் என அடிக்கடி வெளியே வந்து பார்த்தார் ஆனால் தொண்டர்கள் கூட்டம் அப்படியே தான் இருந்தது. கூட்டத்தை ஓரளவுக்கு நிர்வாகிகள் கட்டுப்படுத்திய பின்னர் தொண்டர்களுடன் மேடையில் புகைப்படம் எடுக்க வந்தார் விஜயகாந்த்.
 
அப்போது திடீரென ஒரு தொண்டரை பளார் என அடித்தார் விஜயாகந்த். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த தொண்டருடன் சிரித்து பேசினார் விஜயகாந்த். தொண்டரும் அடி வாங்கியதை மறந்து விஜயகாந்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு சிரித்துக்கொண்டே வெளியே வந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்