அதிருப்தி எம்எல்ஏக்களை இழுத்து ஓபிஎஸ் கதையை முடிக்க தினகரன் பலே திட்டம்!

திங்கள், 20 பிப்ரவரி 2017 (10:37 IST)
சசிகலாவின் விருப்பப்படி முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தை தனிப்படுத்த அவரது ஆதரவு எம்எல்ஏக்களை இழுத்து தங்கள் பக்கம் சேர்க்க சசிகலா நியமித்த அதிமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.


 
 
முதல்வர் பதவியை பிடிக்க முயற்சி செய்த சசிகலா திடீரென சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல மாற்று ஏற்பாடாக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்து விட்டு சென்றார். முன்னதாக அன்று இரவு அதிமுக எம்எல்ஏக்கள் மத்தியில் சசிகலா ஆவேசமாக பேசியதாக தகவல்கள் வருகின்றன.
 
அப்போது, எந்த சூழலில் பிளவு பட்டு கட்சி உடைய கூடாது எனவும், கட்சிக்கு துரோகம் இழைத்த பன்னீர்செல்வத்தை தனிமைப்படுத்த வேண்டும் எனவும் சசிகலா ஆதரவாளர்களிடம் கூறியதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.
 
இந்நிலையில் தற்போது சசிகலா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியமைத்ததை அடுத்து ஓபிஎஸ் அணியில் உள்ள எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் டிடிவி தினகரன் களம் இறங்கியுள்ளார்.
 
இதற்காக அவர் ஓபிஎஸ் அணியில் உள்ள முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் சில எம்எல்ஏக்களுடன் பேசியதாக தகவல்கள் வருகின்றன. தங்களுக்கு உரிய முக்கியத்துவம், பதவிகள் வழங்கப்படும் என பிரிந்து சென்ற எம்எல்ஏக்கள், எம்பிக்களிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்க ஓபிஎஸ் தரப்பும் வாக்குறுதிகள் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்