அரசு பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிளுக்கு இடஒதுக்கீடு உண்டா? - உயர்நீதிமன்றம் கேள்வி

சனி, 29 ஆகஸ்ட் 2015 (19:01 IST)
சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் ஒருவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு கடந்த ஏப்ரல் மாதம் நடந்தது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்துக் கொண்டுள்ளனர்.
 

 
மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வின்போது மொத்த இடங்களில் 3 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது. இதுகுறித்து மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
 
ஆனால், தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கீடு எதுவும் வழங்கவில்லை’ என்று கூறியிருந்தார்.
 
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு வெள்ளியன்று (ஆக. 28) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கோவி.ராமலிங்கம் ஆஜராகி வாதிட்டார்.
 
அப்போது நீதிபதிகள், ‘வேலை வாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பதவி உயர்வில் வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். பின்னர், இதுகுறித்து விரிவான பதில் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி விசாரணையை செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்