ஆலங்குளம் அருகே உள்ள தெற்கு கரும்பனூர் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் மயில்ராஜ் (வயது 27), கூலி தொழிலாளி. அவருடைய மனைவி சண்முகவடிவு (20). இவர்கள் இருவரும் காதலித்து 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு செல்வஅரசி என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது.
சண்முகவடிவு சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். கடந்த 7 ஆம் தேதி அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது. சிகிச்சைக்காக பாவூர்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை சண்முகவடிவு பரிதாபமாக இறந்தார்.
விசாரணையில் சம்பவத்தன்று இருமல் அதிகமாக இருந்ததால், இருமல் மருந்து என நினைத்து பாட்டிலில் இருந்த என்ஜின் ஆயிலை சண்முகவடிவு குடித்ததாக கூறப்படுகிறது. திருமணம் ஆகி 1½ ஆண்டுகள் ஆவதால், நெல்லை உதவி ஆட்சியர் சீனிவாசன் மேல் விசாரணை நடத்தினார்.