''கழகத் தோழர்கள் விரைந்து வாருங்கள்! - முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

செவ்வாய், 5 டிசம்பர் 2023 (21:44 IST)
ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் மிக்ஜாம் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்  என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மிக்ஜாம் புயல் மற்றும்  வரலாறு காணாத மழையினால் சென்னையில் உள்ள  சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் எச்சரிக்கையுடன் மீண்டும் இணைப்பு கொடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார்;

பால் வாங்க பொதுமக்கள்  நீண்ட வரிசையில் நிற்கும் நிலையில், அனைவருக்கும் தேவையான பால் வி நியோகம் செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் உறுதியளித்திருந்தார்.

வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களை மீட்புப் படையினர், போலீஸார் மீட்டு முகாம்களில் தங்க வைத்து அவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு செய்து வருகிறது.

இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின்,

‘’அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் மிக்ஜாம் பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

களத்தில் இறங்கி உதவிகள் செய்துகொண்டிருக்கும் கழகத்தினருடன், இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பாதிப்புகளில் இருந்து மீண்ட பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் விரைந்து வாருங்கள்! ‘’என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்