எஸ்.ஐ-க்கு அரிவாள் வெட்டு.! பிரபல ரவுடி செல்வத்தை சுட்டு பிடித்த போலீசார்.!!

Senthil Velan

திங்கள், 19 ஆகஸ்ட் 2024 (12:18 IST)
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற பிரபல ரவுடி செல்வத்தை  போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.
 
கன்னியாகுமரி மாவட்டம்  கரும்பாட்டூர் பகுதியை சேர்ந்தவர் பிரபல ரவுடி செல்வம் என்ற தூத்துக்குடி செல்வம்.  இவர் மீது ஆறு கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் தென் மாவட்டங்களில் பல்வேறு காவல் நிலையங்களில் உள்ளன. இவற்றில் ஏழு வழக்குகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளன. 
 
இவர் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அழகுக்கு புறம் பகுதியில் ஒருவரை வழிமறித்து அறிவாளால் வெட்டிவிட்டு பணத்தை பறித்து விட்டு தப்பி ஓடினார். இதை அறிந்த அஞ்சு கிராமம் போலீசார் ரவுடி செல்வத்தை தேடி வந்த நிலையில் சுசீந்திரம் அருகே தலைமுறைவாக இருப்பது தெரியவந்தது.
 
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற  அஞ்சுகிராமம் போலீசார், ரவுடி செல்வதை பிடிக்க முயன்றனர்.  அப்போது எஸ்.ஐ., லிபி பால்ராஜை, அறிவாளால் வெட்டி விட்டு தப்பிக்க முயன்ற ரவுடி செல்வத்தை  தற்காப்பிற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். போலீஸார் சுட்டதில் ரவுடி செல்வத்தின் காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து செல்வத்தை போலீசார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 
 
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு, தமிழகத்தில் உள்ள ரவுடிகளை களை எடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக்காலமாக ரவுடிகள் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பது அதிகரித்து வரும் நிலையில், இது ரவுடிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்