நோக்கியா கம்பெனியில் 'அம்மா மொபைல்': சி.பி.எம். எம்.எல்.ஏ. யோசனை

செவ்வாய், 21 அக்டோபர் 2014 (19:31 IST)
ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா செல்போன் நிறுவனம் வரும் நவம்பர் மாதம் முதல் மூடப்பட உள்ளது. அதனால் அந்நிறுவனத்தில் `அம்மா மொபைல்' தயாரிக்கலாம் என்று மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்திரராஜன் கூறியுள்ளார்.
 
நோக்கியா நிறுவனம் செல்போன் உற்பத்தியை வரும் நவம்பர் 1 முதல் நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் அந்த நிறுவனத்தில் பணியாற்றும் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து கடும் பாதிப்புக்கு ஆளாக உள்ளனர். எனவே நிறுவனத்தின் உற்பத்தியை தொடர வலியுறுத்தி பல்வேறு கட்டப் போராட்டங்களை தொழிலாளர்கள் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், தமிழக அரசு அதிகாரிகளை சந்தித்துப் பேசிய, சி.ஐ.டி.யூ.வின்  மாநிலத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினருமான அ.சௌந்திரராஜன் கூறுகையில், அம்மா குடிநீர், அம்மா உப்பு உள்ளிட்ட திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதைப் போல 'அம்மா மொபைல் போன்'களையும் அறிமுகப்படுத்தலாம். அதற்கு மூடப்பட உள்ள நோக்கியா நிறுவனத்தை தமிழக அரசே ஏற்று நடத்தலாம்.
 
அரசின் சார்பில் லேப் டாப்புகள் இலவசமாக வழங்கும் போது செல்போன்களை வழங்கிட முடியும். ஒரு செல்போன் விலை ரூ.700 க்கு விற்பனை செய்ய இயலும் அதனால் தொழிலாளர்களின் பாதிப்பு தடுக்கப்படும்" என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்