சி.ஆர். சரஸ்வதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு...

திங்கள், 2 ஜனவரி 2017 (09:21 IST)
ஜெ.வின் மரணம் குறித்து சந்தேகம் எழுப்பிய நீதிபதி பற்றி கருத்து தெரிவித்த அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


 

 
ஜெ.வின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அதிமுக பிரமுகர் ஜோசப் என்பவர் சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், ஜெ.வின் மரணத்தில் தனக்கே மர்மம் உள்ளது என்று கூறியதோடு, இந்த வழக்கில் பிரதமர் அலுவலகம், மத்திய அரசு, தமிழக அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார். இந்த மரணம் குறித்து மத்திய அரசும் எந்தத் தகவலையும் வெளியிடாதது ஏன் என அவர் கேள்வியும் எழுப்பினார். மேலும், ஜெ.வின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டி வரும் எனவும் அவர் எச்சரித்தார்.
 
இதுபற்றி கருத்து தெரிவித்திருந்த சி.ஆர். சரஸ்வதி “ நீதிபதியின் கருத்து ஒன்றைரைக் கோடி தொண்டர்களின் மனதைப் புண்படுத்துவதாக உள்ளது.  அவர் இப்படி கூறியதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்று கூறியிருந்தார்.
 
அவரின் கருத்திற்கு உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவர் மீது விரைவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என அவர்கள் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்