திருநின்றவூரில் தேர்வெழுத சென்ற கல்லூரி மாணவனுக்கு சரமாரியாக வெட்டு

வியாழன், 15 பிப்ரவரி 2018 (19:50 IST)
திருநின்றவூரில் கல்லூரிக்கு தேர்வு எழுத சென்ற மாணவர் ஒருவரை மர்மநபர்கள் கத்தியால் சரமாரியாக வெட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
சென்னை ஆவடி அடுத்த அன்னனூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் திருநின்றவூரில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ரஞ்சித்துக்கு திருநின்றவூரை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த வாரம் தகராறு ஏற்பட்டுள்ளது.
 
இதில் ஆத்திரம் அடைந்த் சந்தோஷ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து தாக்க முடிவு செய்து இன்று கல்லூரிக்கு சென்ற ரஞ்சித்தை வழிமறித்து தாக்கியுள்ளனர். கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரஞ்சித் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார். சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்கள் தப்பி ஓடினர்.
 
இதையடுத்து ரஞ்சித்தை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ரஞ்சித் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தோஷ் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்