நடத்தையில் சந்தேகப்பட்டு பள்ளி ஆசிரியையைக் கொடூரமாகக் குத்திக் கொலை செய்த கணவர்

சனி, 30 ஆகஸ்ட் 2014 (09:54 IST)
கோவை ஆவாரம்பாளையத்தில், நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியைக் கொடூரமாகக் குத்தி, கணவர் கொலை செய்துள்ளார்.

கோவை ஆவாரம்பாளையம் ஷோபா நகரிலுள்ள பட்டாளம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் 30 வயதுடைய சந்தோஷ்குமார். மோல்டிங் கூலி தொழிலாளி.

இவரது மனைவி 29 வயதுடைய உமா மகேஸ்வரி. இவர், சித்தாப்புதூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

8 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்குத் திருமணம் நடந்தது. இந்தத் தம்பதியினருக்கு 6 வயதுடைய யாசினி என்ற மகளும் 5 வயதுடைய விகாஷ் என்ற மகனும், உள்ளனர்.

கடந்த சில மாதங்களாக சந்தோஷ்குமார் சரியான வேலையின்றி இருந்துள்ளார். அவர் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.

இதனிடையே, மனைவியின் நடத்தையில் சந்தோஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் முற்றி சண்டை நடந்துள்ளது.

இந்நிலையில் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சந்தோஷ்குமார் மனைவி உமாமகேஸ்வரியிடம் தகராறில் ஈடுபட்டு சண்டை போட்டுள்ளார்.

அப்போது, அங்கிருந்த கத்தியை எடுத்து உமாமகேஸ்வரியை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இரவு முழுவதும் பிணத்துக்கு அருகிலேயே படுத்து தூங்கிய அவர், காலை 6.30 மணிக்கு பீளமேடு காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார்.

இதைத் தொடர்ந்து சந்தோஷ்குமாரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்