தமிழகத்தின் 15ஆவது சட்டமன்ற பேரவைக்கு புதியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரவைத் தலைவர் மற்றும் பேரவைத் துணைத் தலைவர் ஆகியோரைப் பாராட்டி முதல்வர் ஜெயலலிதா உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, “ஜனநாயக நாட்டில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்பவை ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இதில் ஒரு பக்கம் சரியாக இருந்து, மறுபக்கம் சிதைந்து போயிருக்குமேயானால் அந்த நாணயம் செல்லாக் காசாகிவிடும்" என்றார் அண்ணா.
அண்ணாவின் பெயரை கட்சியிலேயும், அண்ணாவின் உருவத்தை கொடியிலேயும் தாங்கிக் கொண்டுள்ள கட்சி அதிமுக. எனவே, அண்ணாவின் கொள்கைக்கு ஏற்ப, எம்.ஜி.ஆரின் வழியில் ஜனநாயக நெறிமுறைகளை கட்டிக் காக்க நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம்.
அதே சமயத்தில் எதிர்க்கட்சிகளும் தங்களுடைய கடமையையும், பொறுப்பினையும் உணர்ந்து, மக்களுக்குப் பயன்படக் கூடிய ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.