ஓபிஎஸ்-சசிகலா ஆதரவாளர்கள் மோதல்!

சனி, 25 பிப்ரவரி 2017 (13:40 IST)
அதிமுக கட்சி சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்து கிடக்கிறது. இதனையடுத்து நேற்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை இருதரப்பினரும் போட்டி போட்டு கொண்டாடினர்.


 
 
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை கொண்டாடி, விழா மேடையில் பேசிவிட்டு சென்ற பன்னீர்செல்வம் ஆதரவு முன்னாள் அதிமுக எம்எல்ஏவை சசிகலா தரப்பில் உள்ள அதிமுக எம்எல்ஏ ஆள் வைத்து தாக்கியுள்ளார்.
 
முன்னதாக ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் பேசிய முன்னாள் எம்எல்ஏ மணிமாறன், தற்போதைய எம்எல்ஏ ஏழுமலையை கடுமையாக விமர்சித்தார். எம்எல்ஏ ஆவதற்கு முன்னர் ஏழுமலை என்னென்ன தொழில் செய்து வந்தார் என்பது குறித்து மேடையில் பேசினார் மணிமாறன்.
 
அப்போது நான் ஒன்னும் ஏழுமலையை போல சாராயம் காய்ச்சி விற்று ஜெயிலுக்கு போனவன் அல்ல. சாராய ஊரலை திருடி வித்தவனும் அல்ல என கூறிய மணிமாறன் ஏழுமலை சசிகலா தரப்பிடம் இருந்து 10 கோடி பணம் மற்றும் 2 கிலோ தங்கம் வாங்கினார் எனவும் குற்றம் சாட்டினார்.
 
இதனையடுத்து பேசி முடித்துவிட்டு வேறு இடத்துக்கு செல்லும் போது மணிமாறன் தரப்பினரை எழுமலை தரப்பினர் தாக்கியுள்ளனர். பின்னர் இது தொடர்பாக வெள்ளவேடு காவல்நிலையத்தில் மணிமாறன் தரப்பினர் எதிர்தரப்பினர் மீது புகார் அளித்துள்ளனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்