யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த காதலன்: இறந்து பிறந்த குழந்தை

வியாழன், 19 மார்ச் 2020 (10:09 IST)
யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த காதலன்
8 மாத கர்ப்பமாக இருந்த காதலிக்கு யூடியூப் பார்த்து அவரது காதலன் பிரசவம் பார்த்ததாகவும் இதனால் குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாகவும் வெளிவந்த செய்தியை அடுத்து காதலன் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
கும்முடிபூண்டி என்ற பகுதியை சேர்ந்த செளந்தர் என்ற இளைஞர் கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து வந்தார். இரண்டு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் திடீரென கல்லூரி மாணவி கர்ப்பமாகி உள்ளார். இருப்பினும் கல்லூரி மாணவி தான் கர்ப்பமானதை வீட்டுக்கு தெரியாமல் மறைத்து வந்துள்ளதாக தெரிகிறது 
 
இந்த நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த கல்லூரி மாணவிக்கு திடீரென பிரசவ வலி வந்தது. இதனை அறிந்த காதலர் சௌந்தர் அவரை தனியாக ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்று தனது மொபைல் போனில் யூடியூபில் பிரசவம் பார்ப்பது எப்படி என்ற வீடியோவை பார்த்து தனது காதலிக்கு பிரசவம் பார்த்துள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக முதலில் கை வெளியே வந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் வேறுவழியின்றி ஆம்புலன்சை வரவழைத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளார் 
 
மருத்துவமனையில் மருத்துவர்கள் அந்த கல்லூரி மாணவிக்கு பிரசவம் பார்த்த போது குழந்தை இறந்து பிறந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து கல்லூரி மாணவிக்கு தற்போது சென்னை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இதுகுறித்து மருத்துவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காதலர் செளந்தர் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். யூடியூப் பார்த்து தானே பிரசவம் பார்த்ததாககாதலன் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகவும் இதனால் அவர் மீது கடுமையான சட்டத்தின் கீழ் வழக்கு பாயும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்