ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீ! அனைவரும் பத்திரமாக மீட்பு!

புதன், 27 ஏப்ரல் 2022 (12:29 IST)
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஏராளமான உள் மற்றும் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தற்போது ராஜீவ் காந்தி மருத்துவமனையின் தரைதளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தரை தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் மேல் தளத்தில் உள்ள நோயாளிகள் மற்றும் மக்கள் வெளியேற இயலாத சூழல் உள்ளது.

5 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தற்போதைய தகவல்கள்படி தீ விபத்து ஏற்பட்டதுமே கீழ் தளத்தில் இருந்த 7 ஐசியு நோயாளிகள் உட்பட 11 பேர் உடனடியாக மீட்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ஓரளவு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் உள்ளே சிலிண்டர்கள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் 10 பேர் கொண்ட குழு எரிந்த கட்டிடத்தினுள் சென்று பார்வையிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்