வரலாறு காணாத வெப்பம்.. 20 நாட்கள் வெப்ப அலை வீசும்: வானிலை மையம் எச்சரிக்கை

Siva

செவ்வாய், 2 ஏப்ரல் 2024 (07:20 IST)
அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் வரலாறு காணாத வெப்பம் பதிவாகும் என்றும் அடுத்த 20 நாட்களில் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் தொடங்கிவிட்ட நிலையில் வெப்பம் அதிகரித்து வருகிறது என்பதையும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் கொளுத்தி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஏற்கனவே இந்த ஆண்டு கடும் வெப்பம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வரலாறு காணாத வெப்பம் பதிவாக வாய்ப்பிருப்பதாகவும் கடும் வெயில் சுட்டெரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக அடுத்த 20 நாட்கள் சென்னை உள்பட தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வெப்ப அலை வீசும் என்றும் எனவே பொதுமக்கள் அதற்கு தகுந்தவாறு தங்கள் பயணத் திட்டத்தை மாற்றிக் கொள்ளவும் என்றும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வீட்டை விட்டு அவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே வர வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது.

கோடை வெப்பத்தை தணிக்கும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இன்னும் இரண்டு மாதங்கள் பொதுமக்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்