கடந்த 2008ல் ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஈழத்தில் நடப்பது என்ன என்ற தலைப்பில் மதிமுக சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. இதில் வைகோ பேசினார். இதையடுத்து, தேச விரோத குற்றம்சாட்டப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது தேச விரோத சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு 3வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. வைகோ நேரில் ஆஜரானார். அவரது வழக்கறிஞர் தேவதாஸ் விசாரணை அதிகாரி மணிவண்ணனிடம் குறுக்கு விசாரணை நடத்தினார். இதையடுத்து, விசாரணையை நீதிபதி கயல்விழி ஏப்ரல் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.