அரசியல் அமைப்பு 356 ; தமிழகத்தில் ஆட்சியை கலைக்கும் முடிவில் பாஜக?

வெள்ளி, 10 பிப்ரவரி 2017 (19:02 IST)
தற்போதுள்ள தமிழக அரசியல் சூழ்நிலையை பயன்படுத்தி, தமிழகத்தில் அரசியலமைப்பு பிரிவு 356ஐ பயன்படுத்தி, ஆட்சியை கலைத்து விட்டு, மறு தேர்தல் நடத்த பாஜக முடிவு செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


 

 
சசிகலாவிற்கு எதிராக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எழுப்பிய போர்க்கொடி, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது..
 
அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு தனக்கு இருப்பதால், தன்னையே ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என சசிகலா ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல், தன்னை கட்டாயப்படுத்தியே ராஜினாமாவை சசிகலா பெற்றுக் கொண்டார். தற்போது என் ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன் என ஆளுநரிடம் ஓ.பி.எஸ் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் 24 மணி நேரம் ஆகியும் ஆளுநர் தரப்பில் இருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை.
 
எனவே, யாரை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்பதே தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அநேகமாக, சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் சசிகலாவிடமோ அல்லது. ஓ.பன்னீர் செல்வதிடமோ கூற வாய்ப்புண்டு. அதில் ஓ.பி.எஸ் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டால் பிரச்சனை இல்லை. ஒருவேளை, சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டால் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கலவரங்கள் வெடிக்கலாம். அதையே காரணமாக வைத்து மத்திய அரசு அரசியல் அமைப்பு 356 சட்டத்தை பயன்படுத்தி ஆட்சியை கலைக்கலாம். அதன் பின் குடியரசு ஆட்சி அமுல்படுத்தப்படலாம்.
 
அல்லது தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக  சட்டசபையில் ஓட்டெடுப்பிற்கே வாய்ப்பு கொடுக்காமல், 356ஐ பயன்படுத்தி ஆட்சியை கலைத்து விட்டு, மறு தேர்தலை கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தெரிகிறது..
எதுவாக இருந்தாலும், ஆளுநர் தன்னுடைய நிலைப்பாடு என்னவென்று அறிவித்தால் மட்டுமே தெரிய வரும்..

வெப்துனியாவைப் படிக்கவும்