மைனருக்கு தானமாக கொடுக்கப்பட்ட சொத்தினை வாங்கலாமா?

சனி, 8 அக்டோபர் 2016 (01:51 IST)
சட்டம் தொடர்பாக பலதரப்பட்ட மக்களின் பல்வேறுபட்ட வேள்விகளுக்கு வழக்குரைஞர் வெ.குணசேகரன் தரும் பதில்கள்.


 
 
கேள்வி:-
 
சார், நான் திருப்பெரும்புத்தூரில் வசித்து வருகிறேன். சென்னை வேளச்சேரியில் ஒரு மனை, விற்பனைக்கு வந்தது. அதனை வாங்கும் பொருட்டு, அதன் பத்திரங்களை சரி பார்த்தேன். அதில் தாத்தாவின் பெயரில் முதலில் மனை இருந்தது. அவருக்கு இரு மகன்கள். முதல் மகன் தன்னைக் கவனிக்கவில்லை என்ற கோபத்தில் இரண்டாம் மகனின் 12, மற்றும் 15 வயதுள்ள இரு பிள்ளைகளுக்கு இந்த மனையைத்தானமாகக் கொடுத்து பத்திரம் மதிவு செய்திருந்தார். பின்னர், முதல் மகனுடன் சமரசம் ஏற்பட்டு, தானத்தை ரத்து செய்வதாக, இன்னொரு பத்திரம் பதிவு செய்திருந்தார். சிலரிடம் கேட்டதில், தானமாகக்கொடுத்த பிறகு, அவர் கையிலிருந்த உரிமையை அவர் இழக்கிறார். எனவே, மீண்டும் அதனை ரத்து செய்ய அவருக்கு உரிமை இல்லை என்றனர். இன்னும் சிலரோ, தானம் கொடுத்தவர், உயிருடன் இருக்கும் பட்சத்தில் அவர் எப்பொழுது வேண்டுமானாலும் தானத்தை ரத்து செய்யலாம் என்கின்றனர். மைனர் வயதுள்ள பிள்ளைகளுக்குத் தானம் கொடுத்து அதனை ரத்து செய்ததால், அவர்கள் மேஜர் ஆனதும் வழக்குத் தொடர உரிமை உள்ளது என்றும் சிலர் கூறினர். எனவே இந்த மனையை வாங்கலாமா?
 
-சிவராமன், திருப்பெரும்பத்தூர்
 
பதில்:-
 
ஒரு அசையா சொத்தை உயில் எழுதி வைப்பதற்கும், தானமாய்த் தருவதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒரு அசையா சொத்தினை தானமாய்த் தந்து அது பத்திரப்பதிவு செய்யப்பட்டால் அதை தானம் செய்வதவருக்கு அந்த அசையா சொத்தின் மீது பின் எந்த உரிமையும் கிடையாது என்பதுதான் நிதர்சனமான உண்மை. ஆனாலும், தகுந்த, ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களை நீதிமன்றத்தில் நிரூபணம் செய்யும் பொருட்டு, நீதிமன்றத்தின் மூலம் இதை தடை செய்ய முடியும். ஆனால் இங்கு குறிப்பிட்ட சொத்து மைனர்களுக்கு எழுதி வைக்கப்பட்டுள்ளது. மைனர் பெயரில் உள்ள சொத்தை மாற்றி எழுதவோ, பிறருக்கு விற்கவோ பெற்றோருக்கு கூட உரிமை கிடையாது.
 
சட்டப்படி அந்த பெரியவர்ம் தான் கொடுத்த தானத்தை ரத்து செய்தது தவறு, இதே சொத்தை அவர் உயில் மூலம் எழுதி வைத்தார் எனில், அவர் உயிரோடு இருக்கும்வரை அதனை திரும்ன வேறு யாருக்கும் எழுதி வைக்க அவருக்கு உரிமை உண்டு. மேற்கண்ட சம்வத்தைப் பார்க்கும் போது, தான செட்டில்மெண்ட்டுக்கும், உயில் மூலம் வரும் சொத்துக்கும் உள்ள நடைமுறைகளை குழப்பிக் கொண்டுள்ளீர்கள் என நினைக்கிறேன்.
 
இந்த குறிப்பிட்ட நிலத்தைப் பொறுத்தவரை, நிலத்தின் வசம் (Possession) யாரிடம் உள்ளது என்பது முக்கியமான விஷயம். அந்த சொத்தை வாங்கினாலும், மறுபடி அந்த நிலத்தின் possessionயை நீங்கள் பெறுவது கடினமாய் இருக்கும், நீதிமன்றம் சென்று வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகி நீங்கள் மன நிம்மதி இழக்க வேண்டி வரும்.
 
ஆகவே இவ்வளவு குழப்பம் உள்ள நிலையில் நீங்கள் அந்த நிலத்தை வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
 


 









                                                                                      வழக்குரைஞர் வெ.குணசேகரன் B.Sc., B.L

வெப்துனியாவைப் படிக்கவும்