தடையை மீறி சிலை அமைக்குமா பாஜக? – எல்.முருகன் பதிலால் சர்ச்சை!

வியாழன், 20 ஆகஸ்ட் 2020 (11:41 IST)
தமிழகத்தில் விநாயகர் சிலைகள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக தலைவர் எல்.முருகன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்திக்கு தெருக்களில் சிலை வைத்து வழிபடவும், ஊர்வலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் முதல்வரை நேரடியாக சந்தித்து சிலைகள் வைத்து வழிபடுவது குறித்து கோரிக்கை விடுத்திருந்தார்.

எனினும் தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பாஜக தலைவர் எல்.முருகன் “விநாயகர் சிலை நிறுவுவதை பொறுத்த வரையில் இந்து முன்னணி நிலைபாடே பாஜகவின் நிலைபாடு. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் நிலையில் விநாயகர் சிலை அமைக்க மட்டும் தடை ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்கள் இந்த விசயத்தில் திடமான முடிவை எடுத்திருக்கின்றன” என்று கூறியுள்ளார். இந்து முன்னணியின் நிலைபாடே பாஜக நிலைபாடு என அவர் கூறியுள்ள நிலையில், இந்து முன்னணி தடையை மீறி சிலைகள் அமைப்போம், ஊர்வலம் நடத்துவோம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்