ரஜினியெல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார்: பாரதிராஜா மறைமுக தாக்கு!

திங்கள், 29 ஜனவரி 2018 (15:08 IST)
வைரமுத்து விவகாரத்தில் தொடர்ந்து வைரமுத்துவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் இயக்குநர் பாரதிராஜா, வைரமுத்துவுக்கு குரல் கொடுக்காத ரஜினி, கமல் ஆகியோரை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
 
ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்துவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவருக்கு சில பிரபலங்கள் மட்டுமே வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தனர். திரையுலகினர் பலரும் மௌனமாகவே இருந்தனர்.
 
குறிப்பாக வைரமுத்துவின் பாடல்களால் பிரபலாமன நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் இருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் விமர்சித்தார். இந்நிலையில் இதுகுறித்து தற்போது இயக்குநர் பாரதிராஜாவும் மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
 
முன்னதாக ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயரின் சோடா பாட்டில் பேச்சு குறித்து பேசிய பாரதிராஜா, தமிழகத்தில் ஏற்கனவே இருந்த இரண்டு மெயின் ஸ்விட்சுகள் தற்போது இல்லை. அதனால் ஏற்பட்ட வெற்றிடத்தின் காரணமாகவே இது போன்ற சம்பவங்கள் நிகழ்கிறது என்றார்.
 
மேலும் திரையுலகில் வைரமுத்துவின் வரிகளால் புகழ் பெற்றவர்கள் இதற்குக் குரல் கொடுக்க மறுக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்து என்ன செய்யப்போகிறார்கள் என்று ரஜினி, கமல் போன்றவர்களை மறைமுகமாகத் தாக்கி பேசினார் பாரதிராஜா.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்