பஸ் தினம் கொண்டாட தடை : சென்னை கல்லூரி மாணவர்களுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்

சனி, 18 ஜூன் 2016 (15:49 IST)
சென்னையில் பஸ் தினம் கொண்டாட கூடாது உள்ளிட்ட பல்வேறு அதிரடி கட்டுப்பாடுகளை கல்லூரி மாணவர்களுக்கு போலீசார் விதித்துள்ளனர். 


 

 
பல வருடங்களாகவே கல்லூரி மாணவர்களின் செயல்பாடுகளால், சென்னை வாசிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கல்லூரி மாணவர்களுக்குள் அடிக்கடி மோதல், பேருந்தில் படிக்கட்டிலும், மேற்கூரையில் நின்று கொண்டும், ஜன்னலை பிடித்து தொங்கிக் கொண்டும் பயணம் செய்வது, முக்கியமாக பஸ் தினம் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு தொல்லை கொடுப்பது என பட்டியல் நீள்கிறது. மேலும், பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் நடக்கிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
 
எனவே, இதுபற்றி விவாதிக்கவும், மாணவர்களுக்கிடையே ஏற்படும் மோதலை தடுக்கவும் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள முக்கிய கல்லூரி மாணவர்களின் பிரதிநிதிகள், கல்லூரி முதல்வர்கள் மற்றும் மாநகர பேருந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தின் முடிவில் 10 அதிரடி கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டது. அந்த விதிமுறைகளை கல்லூரி நிர்வாகம் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
 
அதேபோல், சென்னையில் தினமும் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை முக்கியமான பஸ் நிறுத்தங்களில் குறிப்பாக மாணவர்கள் பஸ்களில் பயணம் செய்யும் வழித்தடங்கள் உள்ள பகுதிகளில் போலீசார் காவல் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், அதேபோல் கல்லூரி முடியும் நேரத்திலும் இதுபோல் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்