திருப்பதிக்கு சாமிதரிசனம் செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே வந்துள்ளார். இந்நிலையில், திருமலையில் ராஜபக்சேவை படம்பிடிக்க முயன்ற தமிழக செய்தியாளர்களை ஆந்திர காவல்துறையினர் காட்டுமிராண்டுத்தனமாக கடுமையாக தாக்கி, செய்தியாளர்களின் கேமரா, செல்போன் உள்ளிட்ட பொருட்களையும் அடித்து உடைத்தும், அவற்றை பறித்துச சென்றுள்ளனர்.
தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சேதமடைந்த கேமரா உள்ளிட்ட உபகரணங்களுக்கு ஆந்திர அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே சாமி தரிசனம் முடிந்து வந்த ராஜபக்சேவுக்கு மதிமுகவினர் கறுப்புக்கொடி காட்டினர். கறுப்புக் கொடி காட்டிய மதிமுகவினர் மீதும் ஆந்திர காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது, சம்பவ இடத்தில் இருந்த தமிழக செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மீதும் ஆந்திர காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர்.