மாறன் சகோதரர்கள் மனு தள்ளுபடி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அதிரடி

திங்கள், 17 அக்டோபர் 2016 (14:03 IST)
ஏர்செல்-மேக்சிஸ் முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் சகோதரர்கள் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


 

2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன், சென்னையின் ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை மிரட்டி, ஏர்செல் நிறுவனப் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கச் செய்துள்ளார்.
 
இதற்கு கைமாறாக, மேக்சிஸ் நிறுவனத்திடமிருந்து பல்வேறு நிறுவனங்கள் வழியாக தயாநிதியின் சகோதரர் கலாநிதிமாறனுக்குச் சொந்தமான சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு முதலீடு என்ற வகையில் ரூ. 742 கோடி ஆதாயம் கிடைத்தது தெரியவந்தது.
 
இந்த பணப்பரிவர்த்தனையில் அந்நிய செலாவணி மோசடி நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கப் பிரிவினரும் தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்தனர். அதில் தயாநிதிமாறன், கலாநிதிமாறன் உட்பட 6 பேர் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.
 
இதனிடையே இந்த வழக்கு விசாரணை புதுடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அதில் தயாநிதி மாறன், கலாநிதி மாறன், காவிரி மாறன் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இந்த வழக்கில் முன்ஜாமீன் அளிக்கும்படி மூவரும் ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர்.
 
இதுதொடர்பான விசாரணை நடந்த போது, மாறன் சகோதரர்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என அமலாக்கப் பிரிவினர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், புதுடெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கலாநிதிமாறன் உள்ளிட்ட மூவரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால், அடுத்து என்ன நடக்கும் என்று அரசியர் ஆர்வலர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்