ஆந்திரா, தெலங்கானாவுக்கு வழங்கப்படும் சலுகை தமிழகத்தை பாதிக்கும்: பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்

திங்கள், 25 ஆகஸ்ட் 2014 (16:52 IST)
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு மத்திய அரசு அளிக்கும் சலுகைகள் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் நலனை பாதிக்கும் என முதல்வர் ஜெயலலிதா கவலை தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று முதல்வர் ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு வழங்கப்பட உள்ள வரிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள், இப்பகுதியில் சமநிலையின்மையை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
 
இவ்விரு மாநிலங்களிலும் முதலீடு செய்வதற்கு வரிச் சலுகைகள் வழங்கப்படும் பட்சத்தில் தொழிற்சாலைகள் அங்கு இடம் பெயரும் வாய்ப்புள்ளதாகவும் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 
இதுபோன்ற குறிப்பிட்ட பகுதி சார்ந்த வரிச்சலுகைகள் வழங்கும் திட்டங்கள் தேவையற்ற சிக்கல்களை ஏற்படுத்தியது, பல்வேறு மாநிலங்களின் கடந்த கால அனுபவங்களில் இருந்து தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
 
எனவே வரிச்சலுகை குறித்து முடிவெடுக்கும் முன் தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களின் நலனையும் மத்திய அரசு கருத்தில் கொள்ளும் என நம்புவதாக பிரதமருக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்