ஒரு மாத சம்பளத்தை வழங்கும் அதிமுக எம்.பி-எம்எல்ஏ-க்கள்

புதன், 16 டிசம்பர் 2015 (23:19 IST)
தமிழகத்தில் மழை வெள்ள நிவாரண நிதிக்கு அதிமுக எம்.பி மற்றும்  எம்,எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை அளிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து, அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளச் சேதங்களில் இருந்து மக்களை மீட்டெடுத்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு செய்து வருகிறது.
 
அரிதினும் அரிதான இந்த மழை மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக ஏற்படுள்ள  இழப்புகள் ஏராளம் ஆகும்.
 
எனவே, நிவாரணப் பணிகளில் எல்லோரும் பங்கேற்கும் வகையில் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் தங்களால் இயன்ற பொருளுதவியையும், உடல் உழைப்பையும் வழங்கி வருகின்றனர். தன்னலமின்றி ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எனது நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இந்த நிலையில், அதிமுக எம்.பிக்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது ஒரு மாத சம்பளத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்