பாஜக நிழல் படாது என சூளுரைத்த ஜெயலலிதா: முந்திக்கொண்டு ஆதரவளிக்கும் அவர் இல்லாத அதிமுக!

வெள்ளி, 23 ஜூன் 2017 (17:59 IST)
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜகவின் ராம்நாத் கோவிந்தை அதிமுகவின் மூன்று அணிகளும் ஆதரித்துள்ளது. இதனை விமர்சித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 
 
அதில் அதிமுக போட்டிப்போட்டுக் கொண்டு பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜெயலலிதாவின் கொள்கைக்கு விரோதமாக தற்போதையை அதிமுக சென்றுள்ளதை காதர் மொகிதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
அவரது அறிக்கையில், அதிமுக சார்பில் இரண்டு அணிகளும் தாமே முந்திக்கொண்டு பாஜக வேட்பாளராக்கு ஆதரவு தெரிவித்து டெல்லிக்கும் போட்டிபோட்டுக் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதிமுகவின் பாரம்பரியத்திற்கும் அவர்களின் அரசியல் அணுகுமுறைக்கும் இந்த முடிவு முற்றிலும் முரணானது.
 
ஜெயலலிதா வகுத்த பாதையில் இருந்து விலகி செல்வதாகவும், பாஜகவோடு கூட்டணி வைத்து அதனால் ஏற்பட்ட அவமானங்களை தாங்கிக்கொண்டு வெளியேறிய ஜெயலலிதா அம்மையார் மெரினா கடற்கரையில் நடைபெற்ற முஸ்லிம் முன்னேற்ற கழக மாநாட்டில் வருத்தம் தெரிவித்து இனி எப்பொழுதும் பாஜக நிழல் தன் மீது படவிடமாட்டேன் என சூளுரைத்தார்.
 
2014 மக்களவை தேர்தலில் தானே பிரதமர் பதவிக்கு போட்டியிட்டு நாட்டுக்கு தேவை மோடியா? லேடியா? என்கிற முழக்கத்தையும் எழுப்பிய பாரம்பரியம் அதிமுகவுக்கு உள்ளது. அந்த அரசியல் பாரம்பரியம் இப்பொழுது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்