ஆடிப்பெருக்கு விழா கோலாகலம்.! காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் குவிந்த மக்கள்.!!

Senthil Velan

சனி, 3 ஆகஸ்ட் 2024 (12:59 IST)
தமிழர்கள் கொண்டாடி மகிழும் முக்கிய விழாக்களில் ஒன்றாகத் திகழப்படும் ஆடி 18ம் நாள் கொண்டாடப்படும் ஆடிப் பெருக்கு விழா தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் படுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.  
 
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புஷ்ய மண்டபத்துறை, காவிரி ஆற்றில் புதுமணத் தம்பதிகள், பெண்கள் என அனைவரும் புனித நீராடி பழங்கள், காதோலை கருகமணி, மாங்கல்யம் உள்ளிட்டப் பூஜை பொருட்களை வைத்து வழிபட்டனர். பெண்கள் ஒருவருக்கு ஒருவர் மஞ்சள் கயிறு அணிவித்து, வயது முதிர்ந்த பெண்களிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டனர். புதுமண தம்பதிகள் தங்கள் திருமண மாலையை காவிரி ஆற்றில் விட்டு சூரிய பகவானை வழிபட்டனர்.     
 
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் உள்ள காவிரி மற்றும் அரசலாற்றங்கரைகளில், உள்ள பாலக்கரை டபீர் படித்துறை, பகவத்படித்துறை, சக்கரப்படித்துறை, மேலக்காவேரி படித்துறை, சோலையப்பன் தெரு இராஜேந்திரன் படித்துறை, அண்ணலக்ரஹாரம் படித்துறை, சுவாமிமலை படித்துறை உள்ளிட்ட பல்வேறு படித்துறைகளில் ஏராளமானோர் வாழையிலை போட்டு, விளக்கேற்றி வைத்து, சப்பரத்தட்டி வைத்து பூஜை நடத்தினர். 
 
சுமங்கலி பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்ப மேன்மைக்காகவும், புதுமண தம்பதியினர் தங்களது திருமண மாலைகளை ஆற்றில் விட்டு, புதிதாக தாலிப்பெருக்கி அணிந்து கொண்டும் தீபங்கள் ஏற்றி வழிபட்டனர்.  இதேபோல்  தஞ்சை பெரிய கோயில் அருகில் உள்ள கல்லணை கால்வாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பெண்கள் ஆடிப்பெருக்கு விழாவினை கொண்டாடினர். 

ALSO READ: புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்த குரங்கு.! "குரங்கு பாத்" என காங்கிரஸ் கடும் விமர்சனம்.!!

விவசாயத்திற்கு உறுதுணையாக விளங்கும் பொங்கிவரும் காவிரியை வரவேற்று, காவிரி தாய்க்கு நன்றி செலுத்தும் விழாவாக ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்