இந்த வருடமும் ஜெயலலிதாவுக்கு மாம்பழம் கொடுத்த விந்தியா!

வியாழன், 18 மே 2017 (00:01 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதிக்கு அரசியல்வாதிகள் வந்தாலே தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படும் என்பது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் வரலாறாக உள்ளது. ஓபிஎஸ் முதல் தினகரன் வரை ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்தபின்னர் ஏற்பட்டு வரும் திருப்பங்களை ஒன்றன்பின் ஒன்றாக பார்த்து வருகிறோம்



 


இந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகையும் பேச்சாளருமான விந்தியா இன்று திடீரென ஜெயலலிதாவின் சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். ஒவ்வொரு வருடமும் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது தனது தோட்டத்தில் விளையும் மாம்பழங்களை ஜெயலலிதாவுக்கு கொடுத்து வந்த விந்தியா இந்த வருடம் அவருடைய சமாதியில் மாம்பழ படையல் வைத்து வணங்கினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விந்தியா கூறியதாவது:

ஆதாயம் தேடுபவர்களே அணியை தேடுவார்கள். ஜெயலலிதா அளித்த அடையாளமே எனக்கு போதும். இரட்டை இலை சின்னத்தை மீட்கவும், கட்சியை காப்பாற்றவும் இரு அணிகள் இணைவதில் தவறில்லை. மீண்டும் அதிமுகவின் பேச்சாளராக உங்களை சந்திப்பேன். இரு அணிகளும் இணைய என்னால் ஆன முயற்சிகளை எடுப்பேன். இன்னும் 4 வருடங்கள் மட்டுமல்ல, 400 வருடங்கள் அதிமுக ஆட்சிதான் இருக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்