எல்லாவற்றையும் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்: லட்டு விவகாரம் குறித்து குஷ்பு..!

Mahendran

வெள்ளி, 27 செப்டம்பர் 2024 (13:20 IST)
எல்லாவற்றையும் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்," என்று லட்டு விவகாரம் குறித்து நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
 
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து விசாரணை செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், ஆந்திர மாநில அரசும் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
 
இந்த சூழலில், லட்டு விவகாரம் குறித்து நடிகை குஷ்பு தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்:
 
"லட்டு விவகாரத்தை உன்னிப்பாக கவனித்தால், இந்து மதம் குறிவைக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. இந்து மதத்தை துஷ்பிரசாரம் செய்பவர்களிடம் நான் கேட்பது என்னவென்றால், இஸ்லாம் அல்லது கிறிஸ்தவத்தை பற்றி இதே வார்த்தையில் பேச தைரியம் இருக்கிறதா? நேற்று மதத்தை பற்றி தவறாக பேச நினைத்தாலே உங்கள் முதுகெலும்பு நடுங்கும்! 
 
மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களையும் மதிக்க வேண்டும் என்பதுதான், பாரபட்சம் காட்டுவதல்ல. நான் பிறவி முஸ்லிம் என்றாலும், திருமணத்திற்குப் பின்னர் நான் இந்துவாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு எல்லா மதங்களும் ஒன்றுதான். 
 
இந்து மதத்தை அவமதிக்கவோ சாதாரணமாக எடுத்துக் கொள்ளவோ கூடாது.  லட்டு விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அதற்கான விலையை கொடுத்து தீர வேண்டும். எல்லாவற்றையும் பெருமாள் பார்த்துக் கொண்டிருக்கிறார்."
 
குஷ்புவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்