மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், நடிகர் சங்கம் சார்பில் “ரெஸ்க்யூ சென்னை” என்ற பெயரில் ஒரு இயக்கம் ஆரம்பித்து, நடிகர் விஷால், கார்த்திக் மற்றும் பலர் இணைந்து நிவாரண பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
நடிகர் சங்கம் சார்பில், பெறப்பட்ட நிவாரணப் பொருட்கள், சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. உணவு, பிஸ்கட், தண்ணீர், மெழுகுவர்த்திகள், கொசுவர்த்தி சுருள் ஆகியவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
அந்த பணி முடிந்தவுடன், அடுத்து மழை வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு தெருவோரங்களில் தேங்கியிருக்கும் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நடிகர்கள் விஷால், கார்த்தி, ஆர்யா, ராஜேஷ், ரித்தீஷ், ஸ்ரீமன், மாஸ்டர் மகேந்திரன், உதயா மற்றும் நடிகைகள் வரலட்சுமி,லலிதா குமாரி ஆகியோர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்த பணியை செய்து வருகிறார்கள்.
சென்னையில், பெரும்பாலான இடங்களில் வெள்ளம் வடிந்து விட்டாலும், அந்த பகுதிகளில் குப்பை, சாக்கடை, கழிவுகள் குவிந்து கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவேதான் நடிகர்கள் இப்போது அந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.