கார் மோதி விபத்து : போலீசாரிடம் இருந்து தப்பி தலைமறைவான அருண்விஜய்

ஞாயிறு, 28 ஆகஸ்ட் 2016 (14:43 IST)
மதுஅருந்திவிட்டு போலீசாரின் வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்திய நடிகர் அருண்விஜய், போலீஸ் காவலில் இருந்து தப்பி சென்றுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.


 

 
தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக விளங்கும் விஜயகுமாரின் மகன் அருண்விஜய். இவர் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜீத் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். 
 
சென்னை நுங்கம்பக்கம் பகுதியில் உள்ள ஒரு பிரபல ஸ்டார் ஹோட்டலில் நேற்று நடிகை ராதிகா சரத்குமார் மகளின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்து கொண்டு தனது சொகுசு காரில் அவர் வீட்டிற்கு திரும்பினார். 
 
நுங்கம்பாக்கம் பகுதியில் வேகமாக சென்ற அவர் சாலையில் நின்றிருந்த போலீசாரின் வாகனத்தில் மோதியுள்ளார். காரில் போதுமான பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. 
 
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். 
 
அதன்பின் தனக்கு நெஞ்சுவலி என்று கூறிவிட்டு அங்கிருந்த சென்ற அருண்விஜய், போலீஸ் நிலையத்திற்கு திரும்பவே இல்லையாம். அவரின் தந்தை விஜயகுமார் மட்டும் வந்து போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளார்.
 
ஆனால், அவரின் விளக்கத்தை ஏற்க மறுத்த போலீசார், அருண்விஜய் காவல்நிலையத்திற்கு நேரில் வர வேண்டும். இல்லையெனில் அவர் மீது கைது நடவடிக்கை பாயும் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அவர் ஓட்டிவந்த ஆடி காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
 
இந்நிலையில், தப்பிச் சென்ற அருண்விஜய் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்