தப்பு செஞ்சா பாத்ரூமில் விழுந்து கை உடையும்: அமைச்சரின் சர்ச்சை பேச்சு

வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (20:06 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கைது செய்யப்படும் குற்றவாளிகள் அடுத்த நாளே கை உடைந்து காட்சி தருவது போல் சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி வருவது தெரிந்ததே. சென்னையில் பேருந்து ஒன்றில் இரண்டு மாணவர்கள் சக மாணவரை தாக்கிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்கள் அடுத்த நாளே பாத்ரூமில் விழுந்து கையை உடைத்துக் கொண்டதாக போலீசார் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியது. அதேபோல் ஒரு சில ரவுடிகள் கைது செய்யப்பட்ட மறுநாளே பாத்ரூமில் விழுந்து கை உடைந்த காட்சிகளையும் நாம் பார்த்தோம். கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தின் தண்டிக்கப்படாமல் போலீசாரே தண்டனை கொடுப்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்யப்பட்டாலும் பொதுமக்கள் இதனை ஆதரித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 'வேலூர்' மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'அதிமுகவினர் தவறு செய்தாலும் திமுகவினர் தவறு செய்தாலும் தவறு செய்தவருக்கு பாத்ரூமில் வழுக்கி விழுந்து உடையும் என்றும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் யார் தவறு செய்தாலும் அப்படித்தான் இருக்கும் என்றும் தவறு செய்துவிட்டு யாரும் தப்ப முடியாது என்றும் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
நேற்று ஆம்பூரில் அனுமதி வாங்காமல் திமுக தலைவர் முக ஸ்டாலின் கூட்டம் நடத்திய நிலையில் அவர் கூட்டம் நடத்திய திருமண மண்டபம் தேர்தல் ஆணையத்தால் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, 'தேர்தல் நடைபெறும் நேரத்தில் ஒரு சிறிய கூட்டம் நடத்த வேண்டும் என்றாலும் அனுமதி வாங்கித்தான் நடத்த வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட திமுகவுக்கு இல்லையா?என்று கேள்வி எழுப்பினார்
 
அதிமுக ஆட்சியில் சட்டம் தன் கடமையை சரியாக செய்யும் என்று ஆணித்தரமாக கூறுவதற்கு பாத்ரூமில் விழுந்து கை உடையத்தான் செய்யும் என்று அமைச்சர் பேசியது சர்ச்சைக்குரியதாக பார்க்கப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்