என்னையே பிடிக்க வரியா நீ? காவலரை கொடூரமாக தாக்கிய திருடன்

செவ்வாய், 10 ஜூலை 2018 (11:17 IST)
சென்னையில் திருடனை பிடிக்கச் காவலரை திருடன் ஒருவன் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய காலக் கட்டங்களில் காவலர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே போகிறது. பல காவலர்கள் ரவுடிகளின் தாக்குதல்களால் உயிரிழந்தும் போகின்றனர். சமீபத்தில் கூட சென்னையில் ஒரு காவலரை ரவுடிகள் சரமாரியாக தாக்கிய சம்பவம் தமிழக காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் சென்னை பரங்கிமலை துணை ஆணையர் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஆயுதபடைக் காவலரான ஞானசேகர்(32), நேற்று பணி முடிந்து வீட்டுக்குச் சென்றபோது, அங்கு வந்த திருடன் ஞானசேகரிடம் செல்போனைப் பறிக்க முயன்றுள்ளான்.
 
உடனே ஞானசேகர் அந்த திருடனை பிடிக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த திருடன், தான் வைத்திருந்த அரிவாளால் ஞானசேகரை கடுமையாக வெட்டியுள்ளார். இதில் ஞானசேகரின் வலது கையில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
 
இதனையடுத்து தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், ஞானசேகரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், ஞானசேகரை தாக்கிய திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்