5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக சினிமா இயக்குனர் கைது! மனைவிகளே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்!

திங்கள், 11 நவம்பர் 2013 (09:25 IST)
FILE
5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக சினிமா இயக்குனர் கைது! மனைவிகளே பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்!

5 பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக சினிமா இயக்குனர் ஜஸ்டஸ் ரவி என்பவர் கைது செய்யப்பட்டார் அவரை மனைவிகளே சேர்ந்து பொறிவைத்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள நெய்யூர் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டஸ் ரவி (வயது43). இவர் ‘வாச்சாத்தி’, ‘பனிமலர்கள்’ போன்ற தமிழ் திரைப்படங்களை இயக்கி உள்ளார். இவர் தக்கலை அருகே உள்ள சித்திரங்கோட்டை சேர்ந்த அனிதா பால்நேசம் என்ற பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் ஜஸ்டஸ் ரவியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படத்தொடங்கியது. அவர் சென்னைக்கு செல்வதாக கூறிவிட்டு அடிக்கடி வீட்டுக்கு வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அனிதா பால்நேசம் இது பற்றி விசாரிக்கத் தொடங்கினார்.

அப்போது,

பூதப்பாண்டி அருகே உள்ள கீரிப்பாறை சுருளக்கோடு பகுதியை சேர்ந்த ஷீபா என்ற செல்வகுமாரி என்பவருடன் ஜஸ்டஸ் ரவி குடும்பம் நடத்துவது தெரியவந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அனிதா பால்நேசம் அதிர்ச்சி அடைந்தார்.

இதேபோல ஜஸ்டஸ் ரவி பல பெண்களை ஏமாற்றி இருக்கலாம் என்று அனிதா பால்நேசமும், ஷீபாவும் சந்தேகம் அடைந்தனர். மேலும், அவரது திருமண லீலைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று முடிவு செய்தார்.

இதுகுறித்து அவர்கள் இருவரும் மார்த்தாண்டம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில் திரைப்பட இயக்குனர் ஜஸ்டஸ் ரவியை பிடிக்க போலீசார் அவரது மனைவிகளான அனிதா பால்நேசம் மற்றும் ஷீபா என்ற செல்வகுமாரி ஆகியோருடன் சேர்ந்து திட்டம் தீட்டினர்.

அதன்படி சென்னையில்...

தங்கி இருந்த ஜஸ்டஸ் ரவியுடன் அனிதா பால்நேசத்தின் குழந்தையை பேச வைத்தனர். போலீசார் கொடுத்த அறிவுரைப்படி, தந்தையிடம் குழந்தையை அன்புடன் பேசவைத்தனர். மழலை மொழியில் மயங்கிய ஜஸ்டஸ் ரவி சென்னையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வருவதாக கூறினார்.

அதன்படி சென்னையில் இருந்து புறப்பட்ட ஜஸ்டஸ் ரவி நேற்று காலை திருவனந்தபுரத்திற்கு விமானத்தில் வந்து இறங்கினார். அவரை மனைவிகள் அனிதா பால்நேசமும், செல்வகுமாரியும் ஒன்றாக சேர்ந்து வரவேற்று காரில் ஏற்றிக்கொண்டு குமரி மாவட்டத்திற்கு அழைத்து வந்தனர்.

வழியில், குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளையில் மார்த்தாண்டம் மகளிர் போலீசார் ஜஸ்டஸ் ரவியை கைது செய்தனர்.

விசாரணையில் ஜஸ்டஸ் ரவி...

பல்வேறு விதமான தகவல்களை கூறி போலீசாரையும், அவரது மனைவிகளையும் அதிர்ச்சி அடைய செய்தார். அதன் விவரம் வருமாறு:-

ஜஸ்டஸ் ரவி முதலில் பனச்சமூடு பகுதியை சேர்ந்த சைலஜாவை திருமணம் செய்தார். அதன்பின்னர் 2-வதாக கேரளமாநிலம் கொட்டாரக்கரையை சேர்ந்த பிந்துவையும், 3-வதாக தக்கலை அருகே உள்ள சித்திரங்கோட்டை சேர்ந்த அனிதா பால்நேசத்தையும், 4-வதாக கேரள மாநிலம் திருமலையை சேர்ந்த ஒரு இளம் பெண்ணையும், 5-வதாக சுருளக்கோடு பகுதியை சேர்ந்த ஷீபா என்ற செல்வகுமாரியையும் திருமணம் செய்து இருக்கிறார்.

மேலும், தற்போது மேல்மருவத்தூரில் உள்ள பூஜா என்ற இளம் பெண்ணுடன் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்த தகவலும் வெளியாகி உள்ளது. போலீசார் இவரது கைவரிசை எங்கெல்லாம் காட்டப்பட்டுள்ளது என்பதை விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்