4 சிறுமிகளை பலாத்காரம் செய்த கொடூரம்: தனியார் காப்பக நிர்வாகி கைது

திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (13:25 IST)
மதுரையில் தனியார் காப்பகத்தில் 4 சிறுமிகளை பலாத்காரம் செய்த காப்பக நிர்வாகியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இதில் 20 க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் தங்கி வருகின்றனர். இந்நிலையில் காப்பகத்தில் உள்ள சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து அந்த காப்பகத்திற்குச் சென்று சோதனை நடத்திய மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர்கள், அங்கு தங்கியுள்ள சிறுவர், சிறுமிகளை நேரில் அழைத்து விசாரித்தனர். அப்போது அந்த காப்பகத்தின் நிர்வாகிகளில் ஒருவரான ஆதிசிவன் என்பவர், 4 சிறுமிகளை கொன்று விடுவேன் என மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம், அந்த 4 சிறுமிகளை மதுரை முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார்.

பிறகு இது குறித்து சண்முகம், சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் போலீஸார் ஆதிசிவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். தனியார் காப்பகத்தில் நடந்த இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்