ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுமி உயிரிழப்பு

ஞாயிறு, 6 ஏப்ரல் 2014 (10:14 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் நேற்று காலை தவறி விழுந்து 30 அடி ஆழத்தில் இருந்து மீட்டக்கப்பட்ட 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
கள்ளக்குறிச்சி அருகே வசிக்கும் 29 வயதான ராமச்சந்திரன் என்பவரது மகளான 3 வயது  மதுமிதா, அவர்களது வீட்டின் அருகே தோண்டப்பட்டிருந்த  ஆழ்துளை கிணற்றில் விழுந்தாள்.
 
வெறும் சாக்கு பையால் மூடப்பட்டிருந்த அந்த 500 அடி ஆழமுள்ள கிணற்றில், குழந்தை 30 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டாள். இது குறித்து தகவல் அறிந்தவுடன் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
 
ஆழ்துளை கிணற்றுக்கு அருகே மற்றொரு குழியை தோண்டிய மீட்பு படையினர் பெரும் போராட்டத்திற்கு பின்னர் அதிகாலை குழந்தையை மீட்டனர்.அதன் பின்னர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்ட சிறுமி மதுமிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்