காரில் கோவை டூ லண்டன்: அசத்தும் 3 பெண்கள்

திங்கள், 27 மார்ச் 2017 (19:42 IST)
பெண் கல்வி, பெண் முன்னேற்றம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோவையைச் சேர்ந்த பெண்கள் லண்டனுக்கு காரில் பயணம் மேற்கொள்கின்றனர்.


 

 
கோவை கல்வியறிவு இயக்கம் சார்பில் கோவையைச் சேர்ந்த மூன்று பெண்கள் கொவையில் இருந்து லண்டனுக்கு காரில் செல்கின்றனர். இவர்களின் இந்த பயணம் நேற்று தொடங்கியது. பெண் கல்வி, பெண் முன்னேற்றம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த பயணம் என தெரிவித்துள்ளனர். தமிழக நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வேலுமணி காரை கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார்.
 
இதுகுறித்து அந்த பெண்கள் கூறியதாவது:-
 
பெண்களுக்கு கல்வி வழங்குவது குறித்தும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பயணத்தை மேற்கொள்கிறோம். பெண்கள் படித்தால் அவர்கள் மூலம் ஒட்டுமொத்த குடும்பமே கல்வி அறிவு பெறுவர்.
 
இதற்காக நாங்கள் காரில் லண்டன் செல்ல உள்ளோம். உலகில் உள்ள எந்த இந்திய பெண்ணும் ஒடுக்கப்பட்டும், பின்தங்கியும் இருக்கக் கூடாது, என்றனர்.
 
இவர்கள் மியான்மர், லோவோஸ், தாய்லாந்து, சீனா, ரஷ்யா, மத்திய ஐரோப்பா, போலாந்து உள்ளிட்ட 24 நாடுகள் வழியாக லண்டன் சென்றடைய உள்ளனர். மொத்தம் 24,000 கி.மீ. தூரத்தை 70 நாட்களில் கடக்கவுள்ளனர். 
 
மேலும், இவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் பெண் கல்வி குறித்த முக்கியத்துவத்தையும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்