29 எம்எல்ஏக்கள் தினகரனுக்கு ஆதரவு: எடப்பாடி ஆட்சியை கவிழ்க மாட்டோம் என உறுதி!

செவ்வாய், 6 ஜூன் 2017 (16:29 IST)
அதிமுகவில் அமைச்சர்களுக்கும் தினகரனுக்கும் ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து மூன்றாவது அணி உருவாகியது. ஜாமீனில் தினகரன் வெளியே வந்ததும் தான் மீண்டும் கட்சி பணிகளில் ஈடுபட உள்ளதாக கூறினார்.


 
 
ஆனால் அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரனை ஒதுக்கி வைப்பதாக ஏற்கனவே அறிவித்தது இன்னமும் தொடர்கிறது என்றார்கள். ஆனால் தினகரன் தன்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என கூறினார்.
 
இதனையடுத்து நேற்றைய தினமே தினகரனுக்கு 11 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று தினகரனை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவிக்க எம்எல்ஏ ஒவ்வொருவராக அவரது வீட்டிற்கு வருகை புரிந்தனர். இதனையடுத்து தினகரனுக்கு 25 எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது.
 
இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 9 மாவட்ட அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் எம்எல்ஏ கலைராஜன், தினகரனை சந்தித்த எம்.எல்.ஏக்கள் முதல்வரின் ஆலோசனையிலும் பங்கேற்பர் என்று அதிமுக அம்மா அணியின் கலைராஜன் பேட்டி அளித்துள்ளார்.
 
29 எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர் என கலைராஜன் தெரிவித்தார். மேலும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து எம்எல்ஏக்கள் டிடிவி தினகரனிடம் ஆலோசனை நடத்தினர் என்றும் ஆட்சி கவிழாது என்றும் கலைராஜன் கூறினார்.
 
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், எடப்பாடி அரசை கவிழ்க்க நாங்கள் நினைக்கவில்லை. எங்களை ஆதரவை தெரிவிப்பதற்காகத்தான் டிடிவி தினகரனை சந்தித்து பேசினோம். கட்சியில் பொதுச் செயலாளரையும், துணைப் பொதுச் செயலாளரையும் அமைச்சர்கள் கட்டுப்படுத்த முடியாது. டிடிவி தினகரனை சந்தித்த எம்எல்ஏக்கள் தமிழக முதல்வருடனான சந்திப்பிலும் கலந்து கொள்வார்கள் என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்