2ஜி வழக்கில் நான் நிரபராதி என நிரூபிப்பேன் - ஆ.ராசா

திங்கள், 17 மார்ச் 2014 (13:33 IST)
என்னால் மத்திய அரசுக்கு எந்த இழப்பீடும் ஏற்படவில்லை என்பதை நீரூபித்துக் காட்டுவேன் என்று ஆ.ராசா கூறினார்.
FILE

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தற்போது எம்.பி.யாக உள்ள ஆ.ராசா மீண்டும் போட்டியிடுகிறார்.

தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாவட்ட பு.புளியம்பட்டி பேருந்து நிலையம் முன் நகர திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இதில் வேட்பாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது, என் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் உண்மையானது அல்ல. விரைவில் நான் நிரபராதி என நிரூபிப்பேன்.

2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் என்னால் மத்திய அரசுக்கு எவ்விதமான இழப்பீடும் ஏற்படவில்லை. இதையும் நான் நிரூபித்து காட்டுவேன்.

அவினாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு கடந்த திமுக ஆட்சியில் ஆய்வுப்பணி தொடங்கப்பட்டது. இப்போது நடந்து வரும் ஆட்சியில் கிடப்பில் போட்டு உள்ளனர். திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காரணத்தாலேயே இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

நான் மீண்டும் இத்தொகுதியில் உங்களின் ஆதரவால் போட்டியிடுகிறேன். எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை தாருங்கள். உங்களில் ஒருவனாக இங்கேயே இருந்து பணியாற்றுவேன் என்று ஆ.ராசா கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்