1000 இலங்கை தமிழ் மாணவர்களுக்கு ரூ.20.98 லட்சம் கல்வி உதவித் தொகை
சனி, 24 மார்ச் 2012 (15:37 IST)
WD
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்து கல்வி பயிலும் 1000 மாணவ, மாணவியருக்கு ரூ.20 லட்சத்து 98 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டிலுள்ள அகதிகள் முகாம்களிலிருந்து கல்லூரிகளில் உயர்கல்வி மேற்கொள்ளும் இலங்கைத் தமிழ் அகதிகள் குடும்ப மாணவ மாணவியருக்கு, ஆண்டு ஒன்றுக்கு இளங்கலை பயிலுவோருக்கு 1200 ரூபாயும்,
இளம் அறிவியல் பயிலுவோருக்கு 1250 ரூபாயும், முதுகலை பயிலுவோருக்கு 1330 ரூபாயும், முதுகலை அறிவியல் பயிலுவோருக்கு 1650 ரூபாயும், தொழில்நுட்ப கல்வி பயிலுவோருக்கு 850 ரூபாயும், பொறியியல் பயிலுவோருக்கு 2750 ரூபாயும், மருத்துவம் பயிலுவோருக்கு 4700 ரூபாயும், கால்நடை மருத்துவம் பயிலுவோருக்கு 1400 ரூபாயும், சட்டம் பயிலுவோருக்கு 860 ரூபாயும், வேளாண்மை அறிவியல் பயிலுவோருக்கு 2850 ரூபாயும், ஊக்கத் தொகையாக வழங்க தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம், 1000 இலங்கை தமிழர் அகதி மாணவ மாணவியர் பயன்பெறுவர். இதற்காக அரசுக்கு 20 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் செலவு ஏற்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.