நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற 53 மாணவ, மாணவிகளுக்கு துணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் 2007-08 ஆம் ஆண்டு சட்டப்பேரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதலாவதாக வரும் 25 மாணவ, மாணவிகளுக்கு பரிசுத் தொகையாக ரூ. 10,000மும், பாராட்டு பத்திரமும் வழங்கவும், மேலும் அவர்களுள் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு பட்டப்படிப்பு மேற்கொள்ள உதவித்தொகையும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
பரிசுத் தொகையும், உதவித் தொகையும் வழங்க ஏதுவாக நகராட்சி, மாநகராட்சிகளின் கல்வி நிதியிலிருந்து ரூ.2.53 கோடியும், அரசு மானியமாக ரூ.2 கோடியும், பங்களிப்பு செய்யப்பட்டு நகராட்சி, மாநகராட்சி பள்ளி மாணவர் கல்வி உதவி நிதி என்ற பெயரில் பொது நிதி ஒன்று உருவாக்கப்பட்டு அந்த நிதி, அரசு நிதி நிறுவனமான டுபிட்கோவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிதியின் மூலம் கிடைக்கும் வட்டியை பயன்படுத்தி மாணவ, மாணவிகளுக்கான பரிசுத் தொகையும், கல்வி உதவித் தொகையும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் மூலம் 2007-08 ஆம் ஆண்டில் முதன் முதலில் 10ஆம் வகுப்பு தேர்வில் இடம் பெற்ற 25 மாணவ, மாணவியருக்கும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற 25 மாணவ, மாணவியருக்கும் பரிசுத் தொகையும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டன.
இதே போல 2008-09 ஆம் ஆண்டில் 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வுகளில் முதலாவதாக வந்த தலா 25 நகராட்சி, மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், பரிசுத் தொகையையும், பாராட்டு சான்றிதழ்களையும் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச்செயலகத்தில் வழங்கினார். மேலும் 3 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகர மேயர் மா. சுப்பிரமணியன், கோவை மேயர் ஆர்.வெங்கடாசலம், மதுரை மேயர் தேன்மொழி கோபிநாதன், திருப்பூர் மேயர் செல்வராஜ், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் நிரஞ்சன் மார்டி, நகராட்சி நிர்வாக இயக்குனர் ப.செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.